செவ்வாய், 9 நவம்பர், 2010


கல்வி வியாபாரிகள் குப்பையும் பொறுக்குவார்கள்...
கல்வி வியாபாரிகள் குப்பையும் பொறுக்குவார்கள்... இரா.சரவணன் செவ்வாய், 26 பெப்ரவரி 2008 13:44கட்டாய நன்கொடை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சன்டிவியிலும் கலைஞர் டிவியிலும் மாறி மாறி பேட்டியளித்துக் கொண்டிருப்பதை காணலாம். பள்ளிக் கல்விக்கு விடிய விடிய வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான ரூபாயும் உயர்கல்விக்கு பல லட்சக்கணக்கான ரூபாயும் வட்டிக்கு வாங்கி, கொடுத்த பணத்திற்கு ரசீதுகூட இல்லாமல் கொட்டி அழுதுவிட்டு பிள்ளைகளை சேர்த்துவிட்டு வந்த பெற்றோர்கள் இந்த பேட்டியைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் எழும் ஆத்திர வார்த்தைகளை அச்சில் ஏற்றமுடியாது.தனியார் கல்வி நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி ஊழல் மற்றும் முறைகேடு நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய அரசு இயந்திரம், பிள்ளைகள் படித்தால் போதும் என்று நினைக்கின்ற அப்பாவி பெற்றோர்கள் புகார் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. பெரும்பாலான சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது தான். இவர்கள் இலவசக் கல்விக்காகவும், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்காகவும், தனியார் பள்ளி, கல்லூரிகளை கட்டுப்படுத்துவதுபற்றியும், அங்கு நடைபெறும் ஊழல்களைப் பற்றியும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எப்படி குரலெழுப்புவார்கள்?அரசு, டாஸ்மாக் வியாபார வளர்ச்சியில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை. 1990க்குப் பிறகு தமிழகத்தில் ஒரு அரசு பள்ளியோ ஒரு அரசு கல்லூரியோ புதிதாக உருவாக்கப்படவில்லை. ஆனால், தனியார் கல்லூரிகளும் பள்ளிகளும் ஊருக்கு ஊர், தெருவிற்கு தெரு முளைத்த வண்ணம் உள்ளன. விதிகளை மீறி கட்டப்பட்டு, 96 பிஞ்சுக் குழந்தைகள் தீக்கிரையான கும்பகோணம் பள்ளி இப்படி முளைத்ததுதான். குற்றவாளி யாரென்றும் காரணம் என்னவென்றும் உலகத்திற்கே தெரிந்தபிறகும் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இன்னும் காரணம் புரியாமல், குற்றவாளி தண்டிக்கப்படாமல் வழக்கு நடந்துகொண்டே இருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் நடத்துவார்கள் என்று பார்ப்போம்.இந்தியாவில் உள்ள 124 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 29 நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் 60 அரசு கல்லூரிகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால்,120க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் உள்ளன. இவர்கள் எல்லாம் தங்களது சொந்தப்பணத்தைக் செலவுசெய்து பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டி, இந்தச் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எப்படியாவது கல்வி அறிவு ஊட்டி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசையிலா செய்கின்றனர்? கல்வி நிறுவனங்கள் நடத்து வதை விட குப்பை பொறுக்கும் வியாபாரம் அதிக லாபம் கொடுக்கும் சூழ்நிலை வந்தால் நாளையே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு குப்பை பொறுக்கத் தயாராகிவிடுகின்ற குப்பைப் பொறுக்கிகள்தான் இந்த தனியார்கள். இப்படிப்பட்ட கல்விச் சாலைகளில் மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களது உரிமைக்காக போராடினால் அரசும், காவல்துறையும்,நிர்வாகமும், நீதித்துறையும், தனியார் முதலைகளுக்கு அரணாக நின்று செயல்படும்.திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியிலும், வெங்கடாசலத்திற்கு சொந்தமான ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியிலும் சீட்டுகளை 20 லட்சம் 40 லட்சம் என கூவிக்கூவி விற்றதை தொலைக்காட்சியில் ஆதாரத்தோடு காட்டி விளக்கியபிறகும் அந்த இரு கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன விளக்கம்தான் கேட்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. மனித உரிமை மீறல், மாணவர்கள் உயிரிழப்பு என சுயநிதி கல்லூரிகளின் கோரமுகம் சமீப காலத்தில் தென்படத் துவங்கியுள்ளன.அனைத்தையும் தின்று தீர்த்துவிட்ட உலகமயம் கல்வியில் தனது கோரப்பற்களை பதியவைத்த 19 ஆண்டுகளில் அரசு கல்வி மீதான தனது கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டது. அரசுப் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, தரமான கல்வியை கொடுக்கவேண்டிய அரசு அதைச் செய்யாமல் அரசுக் கல்லூரி என்றாலே அது எதற்கும் உதவாத கல்லூரி என்ற மாயையை பெற்றோருக்கு ஏற்படுத்தி, பயமுறுத்தி வைத்துள்ளது. பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை குறைத்து மதிப்பிட வைத்துள்ளது. போதுமான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்காமல், அரசே முன்நின்று பெற்றோருக்கு அதிருப்தியை செயற்கையாக ஏற்படுத்தி, அவர்களை தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நோக்கி ஓடவைத்து, தனியார் முதலாளிகளின் லாபத்தை அதிகப்படுத்த முழு உதவி புரிகிறது.மற்ற உலக நாடுகளிலெல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதமளவிற்கு கல்விக்கென நிதி ஒதுக்குகிறது. நம்மைவிட பின்தங்கிய நாடுகளில் கூட நம்மைவிட கூடுதலான அளவிற்கு கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால், இந்தியாவில் வெறும் இரண்டு சதத்திற்கும் குறைவாக கல்விக்கென நிதி ஒதுக்குகிறது. ற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில் படிக்கின்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற எந்தவித உத்தரவாதமுமில்லாமல் பல லட்சங்களை அள்ளிக் கொடுத்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதியாவது மத்திய மாநில அரசுகள் கல்வி குறித்து தனது கொள்கை நிலைபாடுகளை மாற்றிக்கொள்ளட்டும்.ஆரம்பப்பள்ளியில் சேரும் மாணவ மாணவியர்களில் வெறும் 6 சதம் பேர்தான் உயர்கல்வியை பெறுகின்றனர். பொறியியற் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் மாணவர் களில் வெறும் 7 சதத்தினருக்கே படித்ததற்கேற்ற தகுதியான வேலை கிடைக்கிறது. ஆண்டுதோறும் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் ஆரம்ப கல்விக்கூட கிடைக்காமல் கொத்தடிமைகளாக வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களும், பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவனும், தெருக்கோடியில் வயிற்றுக்காக கயிற்றிலேறி வித்தைக்காட்டும் சிறுவனும் நம் கண்ணை விட்டு அகல மறுக்கிறார்கள்! - இரா.சரவணன்
Posted by saravanan at 2:38 AM 0 comments

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு...
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு... இரா.சரவணன் செவ்வாய், 25 மே 2010 12:29ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொன்மை வாய்ந்த, இலக்கிய இலக்கண மரபுகளை தாங்கி நிற்கும், எந்த மொழியின் கலப்பில்லாமலும் தனித்து நின்று இயங்குகின்ற, கிளை மொழிகளை உருவாக்கிய, இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுகளில் 55,000க்கும் அதிகமான தமிழ் தொல்லெழுத்துப் பதிவுகளைப் பெற்று மங்காத புகழோடு சிறந்து விளங்கும் செம்மொழியாம் தமிழுக்கு, கொங்கு மண்டலத்தில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டை வரவேற்போம், பாராட்டுவோம்!இதுவரை நடைபெற்ற எட்டு உலகத்தமிழ் மாநாடுகளின் (1966 மலேசியா, 1968 சென்னை, 1970 பாரீஸ், 1974 இலங்கை, 1981 மதுரை, 1987 மலேசியா, 1989 மொரீசியஸ், 1995 தஞ்சை) வரிசையில் இந்த மாநாடு நடைபெறவில்லை. உலகத்தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு உள்ளது. அந்தக் கழகம் 2011ல் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தலாம் என்ற உத்தேசத்தை அளித்தது.ஆனால், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தமிழக முதல்வருக்கு தமிழ்ச்செம்மொழி மாநாடு தேவைப்படுகிறது. அதனால் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடனான உறவை முறித்துக்கொண்டு, முதல் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2010லேயே நடத்தத் திட்டமிட்டுவிட்டார். சர்வதேச தமிழ் அமைப்பின் உறவு முறிந்த நிலையில், அடுத்தடுத்த மாநாடுகள் மற்ற நாடுகளில் எப்படி நடத்தப்படும் என்பது புரியவில்லை.1974, 1987, 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இதுவரை நூல்களாகத் தொகுத்து வெளியிடப்படவில்லை.தமிழின் தொன்மையும் தமிழரின் பண்பாடும் பாமரனுக்கும் எளியோனுக்கும் சென்றுசேரும் வகையில் சங்க இலக்கியங்கள், காப்பிங்கள், சிற்றிலக்கியங்கள், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ் கணக்கு நூல்கள், நவீன இலக்கியங்கள், தலித் இலக்கியங்கள், பெண் இலக்கியங்கள், திராவிட இலக்கியங்கள், இடதுசாரி இலக்கியங்கள் போன்றவையாவும் மெத்தப்படித்தவர்களின் கைச்சரக்குகளாகவே இருப்பதை மாற்றி, சாதாரணத் தமிழ் படிக்கத் தெரிந்தால் போதுமென்ற அளவுக்கு எளிய வகையில் சந்திபிரித்து, அருஞ்சொற்பொருளுடன், உரிய விளக்கத்துடன் மிகக்குறைந்த விலையில் அச்சிடப்பட்டு, மக்களிடம் அரசு கொண்டுச் சேர்க்கவேண்டும். இதுவே ஆட்சியிலிருப்போர் தமிழுக்குச் செய்யவேண்டிய இன்றியமையாத கடமையாகும்.முத்தமிழான இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழை வளர்க்க, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூடுதல் முக்கியத்துவமளித்து அதற்குரிய ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் நியமிக்கவேண்டும். நாட்டுப்புறத்தமிழ், தெருக்கூத்து, வீதிநாடகம் போன்ற பாரம்பரிய பண்பாட்டு மரபுகளை பேணிக் காக்கவும் அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தமிழில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்துத் துறைகளிலும் அதிக அளவில் உருவாக்க வேண்டும்.மேலும், மருத்துவம் பொறியியல் படிப்புகளில் தமிழ், தொலைக்காட்சிகளில் தமிழில் பாடப்படும் பாட்டிற்கு ஆங்கிலத்தில் தீர்ப்பளிக்கும் ஊடக பண்பாட்டுத்துறையில் தமிழ், வழிபாட்டுமுறையில் தமிழ், அறிவியலில் தமிழ், மதிக்கத்தக்க மொழியாக நாடாளுமன்றத்தில் தமிழ், தமிழக உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் வழக்காடும் வழக்குரைஞர் யாருக்காக வாதாடுகிறார் என்பதே தெரியாமல் இருக்கும் முறையை மாற்ற வழக்கு மொழியாகத் தமிழ், ஊடகத்தில் தமிழ், தத்துவத்தில் தமிழ் இறுதியாக ஆட்சி மொழியாகத் தமிழ் என செல்லவேண்டிய தூரம் அதிகம். அதற்காக இந்தச் செம்மொழி மாநாடு என்ன செய்யப்போகிறது?தமிழின் பெருமையையும் தமிழிலக்கிய செல்வங்களின் சிறப்பையும் உலகறியச் செய்ய எடுக்கப்போகும் முயற்சிகள் என்ன? உயர்தனிச் செம்மொழித்தமிழை அயல்நாட்டவரும் கற்றுக் கொள்ள எவ்விதத்தில் உதவப்படும்? தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்போகும் நிதி எவ்வளவு? என்பதுபோன்ற கேள்விகளுக்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சொல்லப்போகும் பதில் என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது எது என்பதை கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தி விளக்குகிறார்...“ஒரு மொழியின் வளர்ச்சியையும் செழுமையையும் கணிக்க வேண்டுமானால், அம்மொழியிலுள்ள பண்டைய நூல்களின் செழுமையைக் கொண்டு மட்டும் நிர்ணயித்துவிடமுடியாது. அந்தக் காலத்திலிருந்த சமூகத்தில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அது போதியதாக இருக்கும். ஆனால், சமூகத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வரும்போது, அந்தச் சமூகத்திலுள்ள பல்வேறு கருத்துக்களை, அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், கணிதம், சமூகவியல், சட்டம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு அம்மொழி எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதைக் கொண்டே அம்மொழியின் வளர்ச்சியை நிர்ணயிக்கமுடியும்...”சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என பெயரிடவேண்டுமென 64 நாட்கள் உண்ணாவிரதமிருந்து, தான் இறந்தபிறகு தனது சடலத்தை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்கவேண்டுமெனச் சொல்லி மறைந்த காங்கிரசைச் சார்ந்த தியாகி சங்கரலிங்கனார் தமிழுக்கான தீவிர போராட்டத்தின் முன்னோடி என்றே சொல்லலாம். சட்டமன்றத்தில் முதன்முதலில் தமிழில்தான் பேசுவோமென போராடிப் பேசியவர்கள் மறைந்த தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், ஏ.நல்லசிவம். நாடாளுமன்றத்தில் செம்மொழிக்காக குரலுயர்த்திய, ரெயில்வே பணிக்கான தேர்வைத் தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டுமென கோரிக்கைவைத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொ.மோகன் இன்றும் நம்மோடு இருக்கும் என்.சங்கரய்யா போன்ற தலைவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். அவர்களை நடைபெறும் இந்தச் செம்மொழி மாநாட்டில் நினைவு கூர்ந்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கான வரலாற்றிலும் பதிவுசெய்து கவுரவிக்கவேண்டும்.பொதுவாக, உலகத்தமிழ் மாநாடுகளை தமிழகத்தில் ஆட்சியிலிருப்போர் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தமிழர்களின் மெல்லிய மொழி உணர்வை, மொழி வெறியாக்கி தேர்தலில் ஓட்டுக்காகவும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் ஆங்கிலவழிக் கல்விநிறுவனங்களும், தனியார் கல்விநிறுவனங்களும், தடுக்கி விழுந்தால் ஆங்கிலப்பள்ளி என்ற நிலையும் உருவாகியிருப்பது, தமிழ் தமிழென மேடைக்கு மேடைக் கூப்பாடுபோட்டு, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பின்னர்தான் என்ற உண்மை வரலாற்றை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பிற்கு, எந்தத்துறையும் கிடைக்காத பட்சத்தில் இறுதியாக தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவலநிலை யாரால் வந்தது? தமிழில் படித்தால் வேலைவாய்ப்பு குறைவு, தமிழில் படித்தால் அவமானம், தமிழில் படித்தால் பணம் சம்பாதிக்கமுடியாது என்ற நிலை உருவாவதற்கு காரணம் எது? நுகர்வு கலாசாரமும், உலகமயம், தனியார்மயம் மற்றும் தாராளமயத்தை அமலாக்கி மத்தியில் ஆட்சியிலிருந்துவரும் கட்சிகளும் திராவிடக்கட்சிகளும்தான் முக்கியக் காரணம்.திரைத்துறையினரும் துதிபாடும் அரசு அமைப்புகளும் இன்னபிற அமைப்புகளும் பாராட்டுவிழா நடத்தி முடித்துள்ள நிலையில் கலைஞரின் புகழ்பாட மற்றுமொரு பிரம்மாண்டமான திருவிழா தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த மாநாடு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.இந்த மாநாட்டில் புகழுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும், கவிதைகளும், தமிழ்த் தொகுப்புகளும் தமிழுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால், கலைஞருக்கு நிச்சயமாக இருக்கும். அதற்காக மானமிகு வீரமணி, தொல்திருமா முதல் திரையுலகினர் வரை கலைஞரின் புகழ்பாட வெறிக்கொண்டு காத்திருக்கும் மாநாடாகவே இதுத் தெரிகிறது. அதிலும் (மானமிகு) வீரமணிக்கு கொஞ்சம்கூட சலிப்புத் தட்டாமல் எப்படித்தான் புகழ முடிகிறதோ தெரியவில்லை.இத்தகையச் சூழலில், கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞரின் புகழை மட்டுமே பாடும் மாநாடாக அல்லாமல், உண்மையில் தமிழ்மொழி குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும், தமிழுக்காற்றவேண்டிய பணிகளை வடிவமைத்து அதன் வழியில் செயல்படவேண்டிய விதங்கள் குறித்தும் விவாதிக்குமென நம்புவோம்!- இரா.சரவணன்
Posted by saravanan at 2:36 AM 0 comments
Labels:

ஏதாவது செய்திடுவோம்! இரா.சரவணன் வெள்ளி, 02 ஜூலை 2010 07:04வாழவும் வழியில்லைசாகவும் சட்டமில்லைஇருந்தாலும் வாழ்கிறோம்இழிநிலையில் இன்றுவரை!நகர்மயமாதலால்குப்பைக்குக்கூட இடமுண்டுமனிதனுக்கு இடமில்லைசாலையோரத்தில்!வாழ வழிகொடு என்றால்'வா! செம்மொழி மாநாட்டுக்குவழிந்தோடுகிறது...வழியெங்கும் தமிழ்அள்ளிக்குடி' என்கிறார்!காய்ந்துபோன வயிற்றுக்குதமிழாவது தெலுங்காவது!கடைப்பெயரையெல்லாம்தமிழில் மாற்றிதமிழை வாழவைக்கஆசைப்பட்டோரே...‘மதுபான விடுதி’வாழ்ந்திடுமா தமிழ்?தமிழாவது வாழ்ந்ததா?அதுவுமில்லை!கோவையில்பத்துப்பாட்டுக்கு விழா!கலைஞர் டிவியில்குத்துப்பாட்டுக்கு விழா!பாட்டுதான் தமிழில்பேச்சில் இல்லை தமிழ்!வேலைகொடு என்றால்ஒரு ரூபாய்க்கு அரிசி இருக்குஒய்யாரமாய் வீட்டிலிரு என்றிடுவார்!கடைச்சரக்காகக் கூட இல்லைகம்பெனி சரக்காக மாறியது கல்வி!கட்டணத்தைக் குறைக்கச்சொல்லிசாலையில் இறங்கிவிட்டால்காளி வந்து ஆடுதுகாவல்துறைக்கு!பன்னாட்டு முதலாளிக்குஎன் நாட்டுச் செல்வத்தைகண்ணிரண்டை மூடிக்கொண்டுவாரிகொடுத்த ஆட்சியினில்குறிச்சுவைச்ச கூலி கேட்டால்வளைச்சு வளைச்சு விளாசும் லத்தி!ஒழித்தே தீருவோம்குழந்தை தொழிலாளியை எனஓங்காரமிடும் ஆட்சியில்அப்பனுக்கும் வேலையில்லைஎன்னதான் செய்திடுவான் பிள்ளை?பட்டாசு ஆலைதனில்கந்தகத்தோடு சேர்த்துஅப்பாவிப் பிஞ்சும் கருகும்!குளுகுளு அறையினில்குறைந்த ஒலியினில்வாஞ்சையோடு பார்த்திடுவான்வண்ணப்பெட்டி ஒளிரவேஓட்டுவாங்கி ஜெயிச்சவன்!மந்திரிப் பதவிக்குமடிப்பிச்சை கேட்டிடுவார்!மக்களுக்கான அரிசியைமத்தியிலே குறைக்கும்போதுதலையாட்டி நின்றிடுவார்மகுடிக்கு மயங்கிய பாம்பாக!பேயாட்சி செய்திட்டாலும்பிணம் கோடி விழுந்திட்டாலும்மீண்டும் வந்திடுவோம் அரியணைக்கு!ஆணவத்தோடு அலறுகிறார்காசிருக்காம் ஓட்டுவாங்க!என்னதான் செய்திடுவர்ஈனப்பிறவிகளென்றஎக்காளத்தைத் தீயிடஏதாவது செய்திடுவோம்!- இரா.சரவணன்
Posted by saravanan at 2:28 AM 0 comments

அங்காடித்தெரு... அழகுத்தெருவின் அலங்கோலம்
அங்காடித்தெரு... அழகுத்தெருவின் அலங்கோலம் இரா.சரவணன் வெள்ளி, 30 ஏப்ரல் 2010 09:30மலிவு விலைத் தெருவான தி.நகர் ரங்கநாதன் தெருவில் வானுயர்ந்து, பட்டொளி வீசி, பளபளக்கும் வணிக நிறுவனங்களில், வந்து நிற்கும் வாடிக்கையாளர்களிடம், “என்ன வேணும் சார்” என வாய் நிறையப் புன்னகையோடு கேட்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையின் பின்புலத்தையும், அவர்கள் கொடுக்கும் சொற்பச் சம்பளத்தைப் பெறுவதற்குள் அவர்கள் படும் பாட்டையும், கொக்கரிக்கும் வறுமையையும், அவர்களினூடாக இழையோடும் காதலையும், அண்ணாச்சிகளின் அகோரப் பற்களையும் துளியும் மறைக்காமல் துணிச்சலோடு படம் பிடித்து காட்டிய ஜி.வசந்தபாலனுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளலாம்.விரிசல் விழுந்த பூமிக்குச் சொந்தமான தென்மாவட்டங்களிலிருந்து இளைஞர்களையும் பெண்களையும் கொத்துக் கொத்தாய் கொண்டுவந்து அடைத்து வைத்துச் சித்திரவதைப்படுத்தும் தெரு தான் ரங்கநாதன்தெரு என்பதை அப்பட்டமாய்ச் சித்தரித்திருக்கிறது இப்படம். வேலைக்கு ஆளெடுக்கும் போதே அப்பன் இல்லாதவனாய், அக்கா தங்கை உள்ளவனா பார்த்து வேலைக்கு எடு, அப்பதான் பொத்திக்கிட்டு வேலை செய்வான் என வணிக நிறுவனங்கள் தொழிலாளர்களின் வறுமையில் முதலீடு செய்வதை அருமையாய் இப்படம் விளக்குகிறது.அவர்கள் உறங்குமிடத்தின் அவலத்தையும், வருமானம் வரும் கட்டடத்தை பளபளப்பாக வைத்திருக்கும் அண்ணாச்சிகள், உணவிற்காக வைத்துள்ள இடத்தைப் பார்க்கும்போது சித்திரவதைச் சிறைச்சாலைகளை நினைவூட்டுகிறது. உணவிற்காக மூன்றாவது தெரு சென்றுத் திரும்பி வருவதற்காக அவர்கள் கொடுக்கப்படும் அரைமணி நேரமும், ஒருநிமிடம் தாமதமாக வந்தால் சம்பளத்தில் ஒரு ரூபாய் பிடிக்கப்படுவதும், சக தொழிலாளியின் சாவிற்கு சென்றதற்குக் கூட சம்பளம் பிடிக்கப்படும் நிகழ்வுகளும் முதலாளித்துவத்தின் முகமூடியை இப்படம் கிழிக்கிறது.தென்மாவட்டத்தில் லெவல் கிராசிங் கேட்டில் ரெயில்மோதி தந்தையை இழந்த, பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவனாக தேர்ச்சிபெற்ற மாணவன் படத்தின் கதாநாயகன் லிங்கு. தந்தையை இழந்த பின்பு குடும்பத்தைக் காப்பாற்ற ரங்கநாதன் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் கடையில் வேலைக்குச் சேருகிறான். கதாநாயாகி கனியும் குடும்ப வறுமைக் காரணமாக இங்கு வந்து சேருகிறாள். கனியின் பதிமூன்று வயது தங்கை ஒரு மாமியின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்படுவது, குழந்தைத் தொழிலாளர் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஆழமான பதிவு.அந்தக் கடையில் எதற்கும் உரிமையில்லாதவர்களாக கருங்காலி என்று தொழிலாளிகள் அழைக்கும் சூப்பர்வைசரால் அடித்தும் உதைத்தும் மனிதாபிமானமற்ற முறையில் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். செய்யும் சிறு தவறுகளுக்கு ஆண்கள் அடி உதையோடும் பெண்களென்றால் அடி உதையோடு பாலியல் தொந்தரவுகளுடனும் வேலையை தக்க வைத்துக்கொள்ள நேர்வதை வெளிக்கொணர்ந்திருக்கிறது. செய்த சிறு தவறுக்காக என்ன சொல்லி தப்பிச்ச என்று லிங்கு கேட்கும்போது, கனி கூறும் பதில் மனதில் நெருப்பையும் கண்ணில் கண்ணீரையும் வரவழைக்கிறது.ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் காதலும் வறுமை வந்தால் நொறுங்கித்தான் போய்விடுகிறது. லிங்குவின் நண்பன் சௌந்தரபாண்டியனின் காதல் சூப்பர்வைசருக்குத் தெரியவர குடும்ப வறுமைக் காரணமாக தன்னுயிர்க் காதலை இயலாமையாய் மறுத்து, மறைக்கிறான். இதன் விளைவாய் காதலி மாடியிலிருந்துக் குதித்து தற்கொலை செய்கிறாள். இதே ரங்கநாதன் தெருவில் சிலவருடங்களுக்கு முன் ஒரு தொழிலாளி மாடியிலிருந்து விழுந்து இறந்த உண்மைச் சம்பவம் நினைவிற்கு வருகிறது.அதே ரங்கநாதன் தெருவில் வேலைத் தேடித்தேடி விரக்தியான இளைஞனை திருடனாக, கொலைகாரனாக, கொள்ளைக்கூட்டத் தலைவனாக மாற்றாமல் சிறுநீர்க் கழிக்குமிடத்தை சுத்தம் செய்து அதைக் கட்டண சிறுநீர்க் கழிப்பறையாக மாற்றி உழைப்புதான் உன்னதம் என்பதை இளைஞர்கள் மனதில் அற்புதமாக விதைக்கிறார். பாலியல் தொழிலுக்காட்பட்ட ஒரு பெண் குள்ளமான மனிதனை திருமணம் செய்து குள்ளமான குழந்தை பெற்றுக்கொண்டதற்கு மனதிருப்தியுடன் கூறும் காரணம், கற்பு என்ற பெயரில் சமூகம் பார்க்கும் பார்வையைச் சாடுகிறது. அத்தெருவில் இப்படி பலரின் வாழ்நிலையை நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது இப்படம்.ஆண்களின் பழைய காதலை ஏற்றுக்கொள்ளும் ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் பழைய காதலை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இப்படத்தில் பெண்களுக்கும் பழையக்காதல் இருப்பதில் தவறில்லை என்ற முற்போக்கு சிந்தனை ஊன்றப்பட்டிருக்கிறது. 9ம் வகுப்பு கடவுள் வாழ்த்தை காதல் கவிதையாக மாற்றி காதலிக்கு கொடுக்கும் பிளாக் பாண்டி, வறுமை வாட்டியெடுத்தாலும் இளமைக் குறும்புகள் என்றும் விடாது என்பதை படத்தில் கலகலப்பாக காட்டியபோதிலும் கதையின் நோக்கம் மனதில் நின்றுவிடுவதால் கனத்த இதயத்துடனே சிரிக்க வேண்டியிருக்கிறது.இறுதியாக நாயகனும் நாயகியும் கடையை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களிருவரும் தங்குவதற்கு இடமின்றி கே.கே.நகர் நடைமேடையில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களோடு படுத்திருக்கும்போது ஏற்படும் விபத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி. இசையின் ஓசையில் பாடல்வரிகள் காணாமல் போகும் மற்ற பாடல்களுக்கு இடையில், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..., உன்பேரைச் சொல்லும்போதே... ஆகிய, கதைக்காகவே தெரிவு செய்த பாடல்களும் இதமான இசைகளும் கேட்க இனிமையாய் இருக்கின்றன.மொத்தத்தில், ரங்கநாதன் தெருவுக்குச் சென்று இயந்திரத்தனமாய் பொருட்கள் வாங்குவதும் திரும்புவதுமாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அத்தொழிலாளர்களின் வாழ்க்கையின் மறுபுறத்தைக் காட்டி அவர்களின் வாழ்நிலையைப் பற்றி சிந்திக்க வைத்தப் படமாக விளங்குகிறது அங்காடித் தெரு. அங்காடித்தெரு திரைப்படம் வெளியான பிறகு அரசு அதிகாரிகள் தி.நகர் ரங்கநாதன் தெருவில் தொழிலாளர்கள் நிலையை அறிந்துகொள்ள விசாரணை நடத்தியிருக்கின்றனர் என்ற செய்தி இப்படத்தின் இயக்குநர் வசந்தபாலனின் முயற்சிக்கு மாபெரும் வெற்றியாகக் கருதலாம்.-இரா.சரவணன்
Posted by saravanan at 2:26 AM 0 comments

கலைஞரின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம் இரா.சரவணன் செவ்வாய், 29 செப்டம்பர் 2009 18:06சர்க்கரையைச் சுவைத்தால் தான் இனிக்கும், சர்க்கரை என்று எழுதி நக்கினால் நிச்சயம் இனிக்காது. அதுபோலதான் கலைஞரின் உயிர்காக்கும் உயர்சிகிச்சைத் திட்டமும். உயர் சிகிச்சை என்றாலே குறைந்தபட்சம் ஒரு லட்சத்தை தாண்டியதாகத்தான் இருக்கும். அதிலும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை என்றால் எத்தனை லட்சங்களைத் தாண்டும் என்பதைப் பார்ப்பதற்கு பூதக்கண்ணாடியெல்லாம் தேவையில்லை.ஒரு கோடி ஏழை எளிய மக்களுக்கு இதயம், புற்றுநோய் உள்ளிட்ட 51 வகையான நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரூபாய் ஒரு லட்சம் வரை மருத்துவக் காப்பீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதற்கான காப்பீட்டுத் தொகையாக 517 கோடி ரூபாய் மற்றும் சேவை வரியான 48 கோடியும் சேர்த்து, ஆண்டிற்கு 565 கோடி ரூபாயென, நான்கு ஆண்டிற்கு ஆக மொத்தம் 2260 கோடி ரூபாய் பன்னாட்டு தனியார் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தாரைவார்க்கும். நமது மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் கலைஞரின் கண்களுக்குப் புலப்படவில்லையா? அல்லது, இந்த ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வெறும் 105 கோடி முதலீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏழை நிறுவனம். அதனால் அந்த நிறுவனத்திற்கு நாம் காப்பீடு கொடுப்போம் என்று நினைத்தாரா?ஏற்கனவே, மாநில அரசு ஊழியர்களுக்கும் மாநில பொதுத்துறை ஊழியர்களுக்கும் மேற்கண்ட ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டில், காப்பீட்டாளர்களுக்கு முழுப்பணம் கிடைப்பதில்லை என்ற புகார்களும், ‘உங்களுக்கு வந்திருக்கும் நோய் எங்கள் பட்டியலில் இல்லை’ என காப்பீட்டுத் தொகையை நிராகரிப்பதும் என பல முறைகேடுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட புகார்களுக்கு உள்ளான ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்திடம் இத்திட்டத்தை ஒப்படைத்திருப்பது கலைஞரின் தனியார் மய தாகத்தைக் காட்டுகிறது.தங்களுக்கு வந்திருப்பது உயிருக்கு ஆபத்தான நோய் என்று கண்டறியவே கிட்டத்தட்ட அரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய நேரிடும். இந்த நிலையில் இதய மாற்று அறுவை சிகிச்சையோ, பைபாஸ் சர்ஜரியோ, மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையோ தனியார் மருத்துவமனைகளில் செய்வதென்றால் ஒரு லட்சம் ரூபாயில் முடிகிற விஷயமா? காப்பீட்டுத் தொகையான ஒரு லட்சத்திற்கும் மேல் எவ்வளவு பணத்தை நோயாளிகளிடம் பறிக்க முடியுமோ அவ்வளவையும் பறித்துக்கொண்டு அனுப்பிவிடும். மேலும், ஒரு ரூபாய் மதிப்புடைய ஒரு மருந்து நோயாளியின் கைகளில் கிடைக்கும் போது அதன் விலை 20 ரூபாயாக இருக்கும் சூழலில் மருந்து, மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்ற தொடர் சிகிச்சைக்கு கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் உதவுமா? ஆனால், அரசு மருத்துவமனைகளில் செய்துகொள்ளும் சிகிச்சைகளுக்கு மருந்து, மாத்திரைகள், மாதாந்திர செக்கப் போன்றவைகளும் இலவசமாக கிடைக்கும்.லஞ்சம், ஊழல், முறைகேடு, அலட்சியப் போக்கு, சுகாதாரமின்மை என இப்படி பல குறைகளையும் மீறிதான் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. அனைவருக்கும் மருத்துவம் அரசால் எப்படி கொடுக்கமுடியும் என்ற தனது கையாலாகாத்தனத்தை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதை விட ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் 565 கோடி ரூபாயில் மாவட்டம் தோறும் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனைகளும், தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களும், ஊழியர்களும், அனைத்து விதமான அறுவை சிகிச்சை உபகரணங்களும், தரமான மருத்துவ சேவையும் அரசு கொடுக்குமேயானால், இந்த மருத்துவ காப்பீடு அவசியமில்லை.அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனையில்தான் சென்று சிசிச்சை பெற்றுகொண்டார். ஆனால், கலைஞர் தனக்கு முதுகுவலி கொஞ்சம் அதிகமானால் கூட அரசு மருத்துவமனைக்கு வராமல் அப்போலோவிலோ ராமச்சந்திராவிலோ சென்றுதான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட (ஏதாவது விழாக்கள் நடந்தால் தவிர) அரசு மருத்துவமனைகளுக்குள் நுழைவதில்லை.வளர்ந்த நாடான அமெரிக்காவில் மருத்துவ சேவைகள் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் சிக்கியுள்ளதால் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் இருப்பதுபோன்ற பொதுமருத்துவ சேவையை அமல்படுத்த சட்டங்களைக் கொண்டுவருவதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றபோது, அவர்கள் நிராகரித்து, கைவிடத் துடிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை தமிழகத்தில் அமல்படுத்தியிருக்கிறார் கலைஞர்.இந்தத் திட்டத்தால் இன்சூரன்ஸ் நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளும் காப்பீட்டில் ஏற்படும் பிரச்சனைகளால் வழக்கறிஞர்களும்தான் பயனடைவார்களே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.சின்னச்சின்ன எழுத்துக்களில் பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டி காப்பீட்டுத் தொகையை நிராகரிக்கவும் இந்நிறுவனங்கள் தயங்காது.எதிர்காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் செலவழித்தால் போதுமென அரசு மருத்துவமனைகளை மூடிவிட நினைக்கும். அப்போது இக்காப்பீட்டிற்கான தொகை அதிகரிக்கும். சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு கூட பல ஆயிரங்கள் செலவு பிடிக்கும். நோய் இருப்பவருக்கு மருத்துவம் கிடைக்காது. காப்பீடு இருப்பவருக்கே மருத்துவம் கிடைக்கும் நிலை ஏற்படும்.1983ல் வெறும் 139 கோடியாக இருந்த, நோய்களுக்கெல்லாம் தாயான மதுபான டாஸ்மாக் விற்பனை இன்று 15 ஆயிரம் கோடியை எட்டிவிட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இலவசங்களாகவும் இதுபோன்ற திட்டங்களுக்காகவும் செலவு செய்து பெரிய வள்ளல் என பெயர் வாங்கி, ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு, மக்களுக்கான உண்மையான சேவைகளை கலைஞர் செய்வாரா?ஆக, தனியார் மருத்துவமனைகளில்தான் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நிலைக்கு உளவியல் ரீதியாக அப்பாவி ஏழை எளிய மக்களை, இத்திட்டத்தின் மூலம் தயார் செய்வது ஒருபுறம், மக்களுக்கான பொதுமருத்துவ சேவையை கைக்கழுவுவது மறுபுறம். எனவே, இது கலைஞரின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம் என்பதைத் தவிர வேறல்ல!-இரா.சரவணன்
Posted by saravanan at 2:25 AM 0 comments

சற்றுத் தலைநிமிர்ந்த இந்தியாவிளையாட்டு வீரர்களுக்கு வசதியின்மை, விளையாட்டு மைதானங்களில் சில முழுமை பெறாமை, முதற்கட்ட விசாரணையில் 8000 கோடி அளவுக்கு காமன்வெல்த் ஊழல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அக்டோபர் 3 முதல் 14 வரை தலைநகர் டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 74 தங்கம் உட்பட 177 பதக்கங்கள் பெற்று ஆ°திரேலியா முதலிடத்தையும், 38 தங்கம் உட்பட 101 பதக்கங்களைப் பெற்று இந்தியா இரண்டாம் இடத்தையும் பெற்று உலக அரங்கில் பலம் பெற்றுள்ளதை தொழிலரசு சார்பாக பாராட்டுகிறோம். போட்டியின் துவக்கவிழா மற்றும் நிறைவு விழாவில் இசை, நடனம், பாடல், வீரம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவின் சுவைமிகுந்த பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றியுள்ளோம். இந்திய கிரிக்கெட் வாரியம், ஹாக்கி கூட்டமைப்பு, விளையாட்டு ஆணையம் என இந்தியாவில் ஊழலற்ற துறை என்ற ஒன்றைக்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் காட்டமுடியாது. இளைஞர் நலனில் அக்கறையற்று ஆட்சி செய்யும் இப்படிப்பட்டச் சூழ்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஷாமினி, அபிஷேக், அச்சந்தாசரத் கமல், சாய்னாநேவால், அபினவ்பிந்த்ரே உள்ளிட்ட இந்திய வீரர்கள்உண்மையில் போற்றுதலுக்குரியவர்களே. தற்போது வெற்றிபெற்றுள்ள வீரர்கள் தங்களின் சொந்த முயற்சியினால் தனித்திறன் வளர்த்துக் கொண்டவர்களே தவிர அரசிற்கும் இவ்வீரர்களின் வெற்றிக்கும் துளியளவும் சம்பந்தமில்லை. எந்த ஒருநாடு இளைஞர்களின் ஆற்றலையும் திறனையும் முழுமையாக பயன்படுத்துகிறதோ அந்த நாடு விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்கும். வெறும் இரண்டேகால் கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஆ°திரேலியா 177 பதக்கங்கள் பெற்று முதலிடத்தைப் பெறும்போது, சுமார் 110 கோடி மக்கள் தொகையைத் தாண்டி, சரிபாதி இளைஞர்களைக் கொண்ட இந்தியா எவ்வளவு பதக்கங்களைப் பெற்றிருக்க முடியும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதிலிருந்து இந்திய இளைஞர்களின் நலனில் மத்திய மாநில ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுவதில்லை என்பது தெளிவாகிறது. மக்கள் தொகையை ஒரு பூதாகரமான சுமையாக ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். யானையைக் காட்டி பிச்சை எடுக்கும் செயலைப் போல மத்திய மாநில அரசுகள் மக்களின் தேவையைக் காரணமாக காட்டி உலகவங்கியிடம் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் பொழுதை பசியின்றி கழிப்பதற்கே அல்லாடும் நிலையில் 77 சதம் மக்கள் இருக்கின்ற ஒருநாட்டில் இளைஞர்கள் விளையாட்டுகளில் எவ்வாறு ஆர்வம் காட்ட இயலும். பணம் படைத்த, அரசியல் பலம் படைத்த மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே விளையாட்டுக்கான பயிற்சியைப் பெறுவதற்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. ஏழையெளிய சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் மட்டுமே போட்டிகளைக் கண்டுகளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், பன்னாட்டு நிறுவனங்களில் அடிமைக் கூலிகளாக 12 மணிநேரம் 15 மணி நேரம் வேலை செய்யும் இளைஞர்களால் விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்வதற்கான நேரமுமில்லை. திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க இளைஞர் நலனுக்கான நிதி ஒதுக்குவதில், அவர்களுக்கான மைதானம் அமைத்துக் கொடுப்பதில், விளையாட்டிற்கான நேரம் ஒதுக்குவதில், அதற்கான பயிற்சியாளர்களை அமர்த்துவதில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்வம் காட்டவில்லையென்றால் இளைஞர்களின் தனித்திறன், கூட்டுத்திறனை எப்படி வளர்க்கமுடியும்? புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களை எப்படி உருவாக்கமுடியும்? விளையாட்டையும் கல்வித்துறையின் ஒரு பகுதி என்பதைக் கருதி பள்ளிகளில் முதலாம் வகுப்பு துவங்கும்போதே விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளில் விளையாட்டுக்கென தனியாக நிதி வசூல் செய்யப்பட்டு கொள்ளையடிக்கப் படுகிறது. குழந்தைகளுக்குத் தனித்திறன்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் தனித்தனி கோச்சிங்குகள் ஏற்படுத்தி அதன் மூலமும் தனது கொள்ளையை நடத்திவருகின்றன. படிப்பு மட்டுமே வருமானத்தை ஈட்டித்தரும் என்ற மாயையை பெற்றோர்களுக்கு உருவாக்கி, விளையாட்டு என்பது இரண்டாம் பட்சமாக நினைவில் நிறுத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளில் இருக்கின்ற சிறு இடத்தைக்கூட கட்டடமாக கட்டி அதிக அளவில் மாணவர்களை சேர்த்து கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இன்றுவரை நமது அரசு வேடிக்கைப் பார்த்துகொண்டுதான் இருக்கிறது. கால்பந்து விளையாட்டில் உலக தகுதிச்சுற்றுக்குகூட நம்மால் இன்னும் போக முடியவில்லையென்றால் நாம் விளையாட்டுத்துறையில் எப்படிப்பட்ட அவலநிலையில் இருக்கிறோம். அளவுக்கு அதிகமான கருப்பு/வெள்ளைப் பணமாக தரும் கிரிக்கெட்டுக்கு காட்டும் ஆர்வத்தை மற்ற விளையாட்டுகளில் ஆட்சியாளர்கள் காட்டுவதில்லை. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியையும் அதன் இடையிடையே நடைபெறும் குத்தாட்டம் குதியாட்டத்தையும் நேரில் சென்று கண்டு மகிழும் மத்திய அமைச்சர்களும் முதல்வர்களும் ஹாக்கி,கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளைக் கண்டு அவர்களை ஊக்குவிப்பதில்லை. விளையாட்டில் ஆர்வமுள்ள சாதாரண ஏழையெளிய நடுத்தர வர்க்கத்து இளைஞர்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி, அவர்களுக்கான மைதானம் ஏற்படுத்தி, பயிற்சியாளர்களை வைத்து முறையான பயிற்சி அளித்து, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ்கல்மாடி, லலித்மோடி போன்ற விளையாட்டுத்துறையில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை விரட்டினால்தான் இந்திய இளைஞர்கள் உலகின் முன்னணி நட்சத்திரங்களாக மின்னுவார்கள். காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை முற்றுபெறுமா? மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்த கொள்ளைக்கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவார்களா? அல்லது 20, 30 ஆண்டுகள் வரை அலைகழித்து மக்களை மறக்கச் செய்துவிடுவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக